சபரிமலையில் ஜனவரி 14 அன்று மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மாலை திருவாபரண பெட்டி சுவாமி சன்னதிக்கு 6.30 மணிக்கு வந்து சேரும். அதன் பிறகு 6.44-க்கு மகர சங்கரம பூஜை நடைபெறும்.
திருவாபரண பெட்டியை தந்திரி கண்டரரு ராஜீவரரு, சசிநம்பூதிரி பெற்றுக் கொள்வார்கள். இதன் பிறகு தங்க ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். இதையடுத்து பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தருவார்.
இந்த ஜோதியை கண்டுகளிக்க கேரளம், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் சபரிமலையில் குவிந்து உள்ளனர். இதனால் சபரிமலை விழாக்கோலம் பூண்டுள்ளது. மகர விளக்கு பூஜையையொட்டி சுவாமி சன்னதி முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 3500 கேரள போலீசாருடன் மத்திய அதிரடி படைவீரர்கள். மத்திய காமண்டோ படை வீரர்கள், தமிழக போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக சபரிமலையில் நடந்து செல்வதுகூட மிகவும் சிரமமாக உள்ளது. பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான போலீசார் இருந்தாலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் நீடிக்கிறது. பம்பை பகுதிக்குள் கேரள அரசு போக்குவரத்தை தவிர மற்ற வாகனங்கள் உள்ள நுழைய அனுமதி கிடையாது என்று காவல்துறை அறிவித்துள்ளது.
14-ம் தேதி மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லக்கூடாது என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். திருவாபரண பெட்டி வருவதற்கு முன்பு 18-ம் படியில் பக்தர்கள் ஏறுவது நிறுத்தப்பட்டுள்ளது. மகரஜோதி முடிந்த பிறகுதான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்துள்ளது.

