‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ உள்பட தமிழ்ப்படங்களிலும் இந்திப்படங்களிலும் நடித்திருப்பவர் நடிகை நீது சந்திரா. இப்போது அமீர் இயக்கும் ‘ஆதிபகவன்’ படத்தில் ஜெயம் ரவியின் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் உள்ள பட்டாயாவில் நடைபெறுகிறது. துறைமுகத்துக்கு காரில் வந்து இறங்கும் நீது சந்திரா, கப்பலை நோக்கி நடக்க வேண்டும். மறைந்திருக்கும் வில்லன் கூட்டம் சரமாரியாக துப்பாக்கியால் சுடும். அதிலிருந்து நீது தப்பி செல்வதுபோல காட்சி.
இயக்குனர் அமீர் ‘டேக்’ சொன்னவுடன் நீது காரிலிருந்து இறங்கி நடந்தார். அப்போது சரமாரியாக ரவுடிகள் சுடத் தொடங்கினார். இதற்காக போலி தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் ஒரு தோட்டா நீதுவின் உதட்டை கிழித்தது. உதட்டிலிருந்து ரத்தம் கொட்டியது. பயந்து நடுங்கிய நீது கதறியபடி கீழே விழுந்தார். எதிர்பாராத இந்த சம்பவத்தால் படக்குழுவினர் பதறினார்கள். உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நீதுவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
”என் மீது குண்டும் படாத வகையில் ஒரு குறிப்பிட்ட பாதையில் நடக்கும்படி அமீர் கூறி இருந்தார். காரிலிருந்து நான் இறங்கி நடந்தவுடன் சரமாரியாக சுடத் தொடங்கினார்கள். பதற்றத்தில் சொல்லப்பட்டிருந்த பாதையைவிட்டு சற்று நகர்ந்து விட்டேன். இதனால் என் உதட்டை உரசிக்கொண்டு ஒரு புல்லட் பறந்தது. ரத்தம் சொட்ட சொட்ட நான் கீழே விழுந்தேன். தலைசுற்றியதால் மயங்கினேன். இப்போது காயம் ஆறி வருகிறது” என்றார் நீது சந்திரா.

