பனிமலர் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்டு முதலிடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு விருதுகளை வழங்கிப் கொலிவுட் நடிகை பூஜா பேசினார்.
மாணவ, மாணவியருக்குப் பரிகளை அளித்துப் பேசிய நடிகை பூஜா பேசும் போது, “வருங்காலப் பொறியாளர்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.
எனது தந்தையார் என்னை நன்றாகப் படிக்க வைத்ததால் தான் வாழ்வில் நான் சந்தித்த சவால்களை துணிச்சலாக எதிர்கொண்டு வெற்றிபெற முடிந்தது.
அந்த வகையில் நம் அனைவருக்கும் படிப்பு மிகவும் இன்றியமையாதது. இன்றைய மாணவர்கள் மிகவும் தைரியமானவர்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது மாணவியர் கொஞ்சம் மென்மையானவர்களாகவே காணப்படுகிறார்கள்.
அவர்களது மென்மையான குணத்தை ஆண்கள் தவறாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அவ்வாறு நடக்கும் போது பெண்கள் துணிச்சலாக அதனை எதிர்த்துப் போராட வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் மேலும் பல பெண்கள் காப்பாற்றப்படுகிறார்கள். எதிர்த்துப் போராடாமல் விட்டு விட்டால் சம்பந்தப் பட்ட பெண்கள் மட்டுமல்லாது மேலும் பல பெண்கள் பாதிக்கப்படவும் செய்கிறார்கள்.
ஆகவே மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையுடன் படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். குறிப்பாகப் பெண்கள் தன்னம்பிக்கையுடன் துணிச்சலையும் சேர்த்துக் கொண்டு படிக்க வேண்டும் என்று பேசினார்.
தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக நடிகை பூஜா பேசியதை வரவேற்கும் விதமாக மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர்.
இவ்விழாவில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளை நடிகை பூஜா கலகலப்பாக கண்டு மகிழ்ந்தார். நிகழ்ச்சியில் முனி படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு தத்ரூபமாக வேடமிட்டு ஆடிய மாணவனை எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்திய பூஜா அவருக்குப் பரிசுகளையும் வழங்கினார்.

